top of page

அவர்களும் மனிதர்கள் தான்!

  • Writer: Sukumar Sey
    Sukumar Sey
  • Jun 1, 2021
  • 2 min read

இயற்கை எவ்வளவு அழகியலை கொண்டதோ அதே அளவிற்கு இரக்கமற்றதும் கூட. இயற்கையை கடிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் மனிதர்களால் தான் ஏற்படுகிறது என்பதும் உண்மை. மனிதர்களை பூமியை ஆளுபவர்களாய் படைத்த அதே இயற்கை சிலருக்கு சில குறைகளையும் தந்தது தான் அதை இரக்கமற்றதாய் காண்பிக்கிறது. மனிதர்கள் மற்ற ஜீவராசிகளுக்கு இழைக்கும் அநியாயங்கள் ஒரு புறமிருக்க அவர்கள் அவர்களுக்குள்ளேயே இழைத்துக்கொள்ளும் அநியாயங்களும் அதிகம்.

நாம் நமக்கே இழைத்துக்கொள்ளும் அநியாயங்களில் ஒன்று: ஊனம் எனும் சொல் தவறானது என்று கூறி அதற்கு ‘மாற்றுத்திறன்’ என்று பெயர் சூட்டி, அந்த மாற்றத்தையே காரணமாக்கி சிலரை ஒதுக்குவது தான்.

அநியாயங்களில் மற்றொன்று: ஊனம் என்பது உடல்பாகங்களின் குறைபாடுகள் மட்டுமே என்பது. மரபணுக்களில், ஹார்மோன்களில் ஏற்படும் குறைபாடுகள் எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாதா?!

குறையோடு பிறந்த எவரும் குறைகளை சரி செய்து சகஜமாய் வாழ நினைப்பது நியாயமானது தான் அல்லவா?

அப்படி இருக்க, ஆண் உடம்பில் பெண்மை உணர்பவரும், பெண் உடம்பில் ஆண்மை உணர்பவரும் இயற்கை தனக்கு தந்த குறைகளை சரி செய்து முழுமை பெற்று வாழ நினைப்பதும் சரி தான் அல்லவா?

திருநர்கள் இயற்கைக்கு புறம்பானவர்கள் அல்ல. இயற்கையின் குறைகளை நிவர்த்தி செய்து வாழும் மனிதர்களே. அவர்களுக்கும் cisgender மனிதர்கள் போலவே பாலீர்ப்பும், காதலும், காமமும், திருமண வாழ்வும், தாய்/தந்தை உணர்வும், கல்வியும், வேலைவாய்ப்பும், சக மனித உபசரிப்பும் என அனைத்தும் தேவையாய் இருக்கின்றன. அவர்களுக்கு இதெயெல்லாம் கொடுக்க மறந்த அல்லது மறுத்த அதே சமூகம் தான் திருநங்கைகளை பாலியல் தொழிலுக்கும், பிச்சை கேட்பதற்கும் மட்டுமே தகுந்தவர்களாக அடையாளம் காட்டுகிறது. அதே சமூகம் தான் அவர்களை பல கேலிப்பெயர்களை சொல்லி அழைக்கிறது; அவர்களை பார்த்ததும், ஒதுங்கியும் ஓடியும் ஒளிகிறது; அவர்களின் முகம் பார்த்து சிரிக்க மறுக்கிறது. அப்படியே அவர்களை அணுகி சிரித்து பேசும் பலரும் தன் பாலியல் இச்சைகளுக்காவே அதை செய்கின்றனர் என்பதும் ஒரு கசப்பான உண்மை.

திருநர்கள் என்றால் ஆண் உடம்பில் பெண்ணாய் பிறந்த திருநங்கையர் மட்டுமல்ல. பெண் உடலில் ஆணாய் பிறந்த திருநம்பிகளும் தான். திருநங்கைகளை காண்பது போல திருநம்பிகளை நான் பொதுவெளியில் சுலபமா கண்டிருக்க முடியாது. காரணம், இன்றும் பல பெண்களுக்கான முடிவுகள் அவர்களால் எடுக்கப்படுவதில்லை என்பது தான். குடும்பத்தின் கௌரவம் பெண்களை சார்ந்தே உள்ளது என நினைக்கும் சமூகத்தினால் தான். ஆண்களால் தான் பெண்ணாய் உணர்கிறேன் என்று சொல்ல முடிந்த அளவிற்கு ஒரு பெண்ணால் தான் ஆணாய் உணர்கிறேன் என்று சொல்ல முடிவதில்லை. அவர்களின் குரல் பல நேரம் நம் காதுகளில் விழுவதும் இல்லை. இன்று சில திருநம்பிகளை பற்றி உலகம் அறியத்தொடங்கி இருக்கிறது என்றால் அதற்கு அவர்கள் துணிவு தான் காரணம். அந்த துணிவை அவர்களுக்கு தருவது ஓயாமல் ஒலிக்கும் பெண்ணிய குரல்கள் தான்.

இவர்களெல்லாம் மாற்றுபாலினம் கொண்ட மனிதர்கள் என்றால், மனிதர்களில் மாற்றுப்பாலீர்ப்பு (Gay and lesbian) கொண்டவர்களும் உண்டு. அவர்கள் உங்களில், என்னில், மனிதராகப்பட்ட அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் கலந்துள்ளனர் என்பது அறிவியல் நம்பும் நிஜம். ஆராய்ச்சிகள் கூறுவது என்னவென்றால், எந்த ஒரு மனிதரும் 100 சதவிகிதம் எதிர்பாலீர்ப்பு கொண்டவர் அல்ல என்பது ( No person is 100 percent straight). ஆனால் அதை நாம் ஒரு மனநோயாக மாற்றி அதை சினிமாக்களிலும், நண்பர்கள் அரட்டைகளிலும் ஒரு கேலிப்பொருளாக மாற்றி இருக்கிறோம். பாலீர்ப்பு என்பது ஒரு தனிமனிதரின் விருப்பு வெறுப்புகள் சம்பந்தப்பட்டது. அதை காரணம் காட்டி ஒருவரை சிறுமை படுத்துவது எவருக்கும் இல்லாத உரிமை ஆகும்.

மாற்றுப்பாலினம் அல்லது மாற்றுப்பாலீர்ப்பு கொண்ட சக மனிதர்களை நாம் மறந்ததும், மறுத்ததும் நம்மை குற்ற உணர்வு கொள்ள வைக்கவில்லை என்றால் நாமும் ஐம்புலன்களில் எதையோ இழந்த ஊனப்பிறவி என்றே அர்த்தம். LGBTQ மனிதர்களின் அடையாளமாய் Pride Month என்று கொண்டாடப்படும் இந்த ஜூன் மாதத்தில் , அதை நாம் கொண்டாடவில்லை என்றாலும் பரவாயில்லை, அவர்களையும் சக மனிதராய் உணரவாவது முயற்சிப்போம்.

Comments


bottom of page